ஆர்.எஸ்.மங்கலம், செப்.12: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக அதன் நிறுவனர் – தலைவர் ஜான் பாண்டியனும் அஞ்சலி செலுத்த வருகை தந்தார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் (கிழக்கு) சார்பாக அதன் மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையிலும், மண்டலச் செயலாளர் திரவியம், மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலையில், ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர்,தொண்டி, திருவாடானை,திருப்பாலைக்குடி, தேவிபட்டிணம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் பரமக்குடி நோக்கி புறப்பட்டு சென்றனர்.
வாகனங்களில் சென்றவர்கள் கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியன் அஞ்சலி செலுத்துவதற்காக வந்து கொண்டிருந்த நிலையில், மாவட்ட எல்லையான பார்த்திபனூர் பகுதிக்கு சென்று கிழக்கு மாவட்டத்தின் சார்பாகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு அழைத்து வந்தனர். அதன் பின்னர் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வந்து தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் ஏராளமான மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகங்களின் நிர்வாகிகளும், கட்சியினரும் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.