சிதம்பரம், செப். 4: சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி சிதம்பரத்தில் நாளை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. சிதம்பரத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், பாமக மாநில துணை தலைவர் சந்திரபாண்டியன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாளை(5ம் தேதி) நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி சிதம்பரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த பேரணிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணண், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சீய பெரியாரிய பொதுவுடைமை கட்சி மாநில துணை தலைவர் மோகன், மக்கள் அதிகாரம் பொதுச்செயலாளர் வழக்கழிஞர் ராஜூ, திமுக சார்பில் அமைச்சரும், மாவட்ட செயலாளமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ துரை.கி.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர்.
நடராஜர் கோயிலை மீண்டும் இந்து அறநிலைய துறையின்கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. பொதுக்கூட்டத்தில், தீட்சிதர்களுக்கு நடராஜர் கோயிலை பொறுத்தவரை எந்தவித உரிமையும் இல்லை என்பதை நிலைநாட்ட, உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த ஏ.கே.ராஜன் எழுதிய நூல் வெளியிடப்பட உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் கட்டப்பட்டது அல்ல. எனவே தீட்சிதர்கள் நடராஜர் கோயிலை நிர்வகிக்க மத உட்பிரிவு உரிமை கோர முடியாது. நடராஜர் கோயிலை வேத முறைப்படி பூஜை செய்வதாக தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளனர். நடராஜர் கோயில் சைவ மத கோயில். அதில் வேத முறைப்படி பூஜை செய்வது ஆகமத்திற்கு எதிரானது. எனவே, நாங்கள் கோயிலை இந்து அறநிலைய துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.