சென்னை, ஜன1: மாமல்லபுரம் இந்திய நாட்டிய விழா 10ம் நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீ கலைமாமணி பினேஷ் மகாதேவன் குழுவை சேர்ந்த மாணவி ஏ.பி. நிரஞ்சனாவின் பரத நாட்டிய நிகழ்ச்சியை வெளிநாட்டு பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையும், ஒன்றிய சுற்றுலாத்துறையும் இணைந்து கடற்கரை கோயில் வளாகத்தில் ஒரு மாத காலம் நடைபெறும் இந்திய நாட்டிய விழா, கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. விழாவில், தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு நடந்த 10ம் நாள் நிகழ்ச்சியில், முகப்பேர் ஜார்ஜ் நகரை சேர்ந்த தமிழ்நாடு மின்சார வாரிய செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் அருணாச்சலம், கும்மிடிபூண்டி ஆர்எம்கே இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர் பாவை மாதேஷ்வரி தம்பதியின் மகளும்,ஸ்ரீ கலைமாமணி பினேஷ் மகாதேவன் மாணவியும், அக்ஷயா ஆர்ட்ஸ் குழுவை சேர்ந்தவருமான ஏ.பி.நிரஞ்சனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பான முறையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நிரஞ்சனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்த்து, கைதட்டி கண்டு ரசித்தனர். சிலர் தங்களது செல்போனிலும் பரதநாட்டிய நிகழ்ச்சியை வீடியோ எடுத்து சமூக வளைதலங்களில் பதிவிட்டு மகிழ்ந்தன்ர. இறுதியாக, சுற்றுலாத்துறை சார்பில் நிரஞ்சனாவுக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
இதுகுறித்து, பரதநாட்டிய மாணவி நிரஞ்சனா கூறுகையில், ஸ்ரீ கலைமாமணி பினேஷ் மகாதேவனிடம் கடந்த 17 ஆண்டுகளாக முறைப்படி பரதநாட்டியம் கற்றுக்கொண்டு வருகிறேன். தற்போது, அக்ஷயா ஆர்ட்ஸ் குழு மூலம் பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி வருகிறேன். தற்போது, மாமல்லபுரத்தில் நடந்து வரும் இந்திய நாட்டிய விழாவில் அரங்கேற்றம் செய்துள்ளேன். எனது, அரங்கேற்ற நிகழ்ச்சி முடியும் வரை குளிரையும் பொருட்படுத்தாமல் வெளிநாட்டு பயணிகள் ஆர்வமாக கண்டு ரசித்தனர். கடல் கடந்து நமது பரதநாட்டிய கலை உலகம் முழுவதும் பரவி உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது,’’ என்றார்.