மானாமதுரை, ஏப்.17: மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள திருஇருதய ஆண்டவர் தேவாலயத்தில் பாஸ்கு திருவிழா கொண்டாடப்பட்டது. மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் திருஇருதய ஆண்டவர் தேவாலயம் உள்ளது. இத்தாலி நாட்டில் உள்ளது போல 147 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் ஆண்டு தோறும் வருகின்றனர். இந்தாண்டு பாஸ்கு திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.பாஸ்கு திருவிழாவில் கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு நாடகமாக நடக்கும். நாடகத்தில் நடிப்போர் ஒருமாதம் விரதம் இருந்து நடிப்பர்.
ஒவ்வொரு ஆண்டும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு நிகழ்ச்சி தத்ரூபமாக காண்பிக்கப்பட்டது.விழாவில் இடைக்காட்டூர் சமூக நலசங்கத்தின் 75வது ஆண்டு விழா மலரை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டார். இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் தேவாலய பங்குத்தந்தை இமானுவேல் தாசன், திருச்சி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவிற்காக ஏற்பாடுகளை இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை, மரியின் சபை கன்னியர் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.