தா.பழூர் : இடுப்பளவு தண்ணீரில் இறங்கி செல்லும் விசாயிகளுக்காக தினகரன் செய்தி எதிரொலியாக வாய்காலில் பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி பஞ்சாயத்துக்குட்பட்ட குறிச்சி கிராமத்தில் பொன்னாற்று வாய்க்காலில் இருந்து ரங்கராஜபுரம் கிளை வாய்க்கால் மூலம் குறிச்சி, சோழமாதேவி, கண்டியன்கொல்லை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் செல்லக்கூடிய வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வயல்களிலும் சாலைகளிலும் நீர் நிரம்பி உள்ளதால் இடுப்பளவு தண்ணீரில் இடு பொருட்களை சுமந்து செல்லும் சூழல் உள்ளது. மேலும் தற்காலிகமாக மூங்கில் தட்டி பாலம் மூலம் கடந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஊராட்சி நிர்வாகம் மூலம் மூங்கில் கழிகளை கொண்டு தட்டி பாலம் அமைத்து தரப்படும்.இந்த ஆண்டு ஊராட்சியில் பணம் இல்லை என கூறி பாலம் அமைத்து தரப்படவில்லை. இதனால் விவசாயிகளே மூங்கில் பாலத்தை சீரமைத்து வைத்து விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை கொண்டு சென்று வருகின்றனர். தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மூங்கில் பாலம் மூழ்கிய நிலையில் உள்ளது.விவசாயிகள் தண்ணீரில் தத்தளித்து செல்லும் சூழல் நிலை உருவாகி உள்ளது.எனவே போர்க்கால அடிப்படையில் வயலுக்கு செல்லக்கூடிய பாதையை உயர்த்தி தார் சாலையாக அமைப்பதுடன், தற்காலிகமாக வருடம் தோறும் போடப்படும் மூங்கில் பாலத்தை அகற்றிவிட்டு அதில் நிரந்தர கான்கிரீட் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. அதன் நடவடிக்கையாக ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன், வருவாய் அலுவலர் தமிழரசன், இடங்கண்ணி கிராம நிர்வாக அலுவலர் தினேஷ், கோடாலி கருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், மற்றும் குணசேகரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் சாலை மற்றும் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து தினகரன் நாளிதழுக்கும், அதிகாரிகளுக்கும் விவசாயிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்….