மூணாறு, பிப். 7: இடுக்கி மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக, கேரள மாநில பட்ஜெட்டில் ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம், இயற்கை வளங்கள் நிறைந்த மாவட்டமாகும். ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. குறிப்பாக மூணாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவைகளைக் காண உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் முதல்வர் பிரனாயி விஜயன் தலைமையிலான ஆட்சி உள்ளது. அம்மாநில சட்டப்பேரவையில் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் நேற்று முன்தினம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் சுற்றுலா மையங்களின் மேம்பாட்டிற்காக ரூ.50 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது மூணாறின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என தேவிகுளம் எம்.எல்.ஏ ராஜா தெரிவித்துள்ளார். மேலும், இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது கிராமப்புற வளர்ச்சிக்கு உதவும் என அவர் தெரிவித்தார்.