ஆவடி, பிப். 29: ஆவடி மாநகராட்சியில் மாமன்ற கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து, மாமன்ற கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று காலை 11.15 மணி அளவில், மேயர் ஜி.உதயகுமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான், துணை மேயர் சூரியகுமார் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பாதாள சாக்கடை தூர் வாருதல், குப்பை பிரச்னை, பிரதான சாலையில் அதிக வெளிச்சம் கொண்ட எல்.ஈ.டி மின் விளக்கு பொருத்துதல், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துதல், கிடப்பில் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்தல், குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பட்டாபிராம் பகுதியில் தேவையான அடிப்படை மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல், பொதுமக்கள் பிரச்னைகளை கேட்பதற்கு நான்கு மண்டல குழு தலைவர்களுக்கும் தனித்தனி அலுவலகங்கள் வேண்டும் என்பன உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் கூட்டம் தொடங்கியதும், ஆவடி மாநகராட்சியின் 2024 – 25 ஆண்டிற்கான பட்ஜெட்டை மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்தார். அவற்றை மேயர் உதயகுமார் மற்றும் துணை மேயர் சூர்யா குமார் ஆகியோர் பெற்று கொண்டனர். ஆவடி மாநகராட்சி மொத்த வருவாய் ₹523.96 கோடி. மொத்த செலவினம் ₹538.06 கோடி. பற்றாக்குறை ₹14.10 கோடி உள்ளது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிகபட்சமாக குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக ₹167.43 கோடி இந்த பட்ஜெட்டில் ஒத்துக்கப்பட்டுள்ளது.
மொத்த வருவாய்
₹523.96 கோடி
மொத்த செலவினம்
₹538.06 கோடி
பற்றாக்குறை
₹14.10 கோடி
பட்ஜெட்டில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள் :
திட்டங்கள் தொகை (கோடியில்)
குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை 167.43
தார் சாலைகள் 40.00
மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலங்கள் 38.00
கட்டடங்கள் 22.00
கடன் திருப்பி செலுத்துதல் 20.99
சிமெண்ட் சாலைகள் 15.00
தெரு விளக்கு மற்றும் மின்சார சாதனங்கள் 11.60
பூங்கா 10.00
கனரக வாகனங்கள் 7.00
கல்வி நிலைய கட்டடங்கள் மற்றும் தளவாடங்கள் 4.50
இயந்திர தளவாட சாமான்கள் 3.80
இலகுரக வாகனங்கள் 3.00
இதர தளவாடங்கள் 2.10
இதர வாகனங்கள் 2.00