சின்னமனூர், மார்ச் 14: சின்னமனூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் பிரதான் மந்திரி கிராம யோஜனா திட்டத்தில் வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி வரவேற்றார். கூட்டத்தில் சின்னமனூர் ஒன்றியத்திலுள்ள முத்தலாபுரம், காமாட்சிபுரம், எரசக்கநாயக்கனூர், பொட்டிப்புரம், எர்ணம்பட்டி, பூலானந்தபுரம், சீப்பாலக்கோட்டை, அழகாபுரி (என்ற) அப்பிபட்டி ஆகிய 8 கிராம ஊராட்சி பொதுமக்கள் பயன்படும் விதமாக மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் 33 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, விரைவில் இக்குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி நாடு முழுவதும் பயனாளிகளிடம் கலந்துரையாடிய காணொலி காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.