பாடாலூர், மே 23: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று காலை வெயில் அடித்தது. இந்நிலையில் மதியத்திற்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேரம் ஆக ஆக பலத்த மழையாக மாறியது. ஆலத்தூர் தாலுகாவில் பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், நாரணமங்கலம், மருதடி, விஜயகோபாலபுரம், காரை, புதுக்குறிச்சி, தெரணி, கொளக்காநத்தம், கொளத்தூர், அணைப்பாடி, அயினாபுரம் கிராமங்களில் மதியம் முதல் இரவு வரை மழை கொட்டித்தீர்த்தது.
மழை நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்கினர்.