பள்ளிப்பட்டு, மே 19: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் கோடை வெயிலின் உச்சகட்டமாக அக்னி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக 110 டிகிரி வெப்பம் பதிவாகி வருவதால், காலை 9 மணி முதல் மாலை 6 வரை வெப்ப காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்து, தூக்கமின்றி குழந்தைகள், முதியோர், பெண்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், ஆர்.கே.பேட்டை பகுதியில் நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து, காற்றுடன் கூடிய கோடைமழை சுமார் ஒருமணி நேரம் கொட்டியது. இதனால், அனல்காற்று குறைந்து இதமான காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். அதேநேரத்தில், காற்றுடன் கூடிய மழையால், ஆர்.கே.பேட்டையிலிருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலை, காவல் நிலையம் அருகில் புளியமரம் சாய்ந்தது. இதனால், திருத்தணி, சோளிங்கர் மார்க்கத்தில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.