ஆரல்வாய்மொழி, ஆக.11: ஆரல்வாய்மொழி கண்ணுபொத்தை அருகே துணைமின்நிலையம் உள்ளது. அதன் எதிர்புறத்தில் சாலை ஓரமாக இரும்பு மின் கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இந்த மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்து வளைந்தது. மேலும் மின் ஒயர்கள் அறுந்தன. அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இதனிடையே சேதமடைந்த மின் கம்பத்தின் அருகே சாலை முழுவதும் மணல் கொட்டப்பட்டிருந்தது. பெரிய டாரஸ் லாரியில் ஏற்றி வரப்பட்ட மணல் அப்பகுதியில் கொட்டப்பட்டது போல் இருந்தது. இது அப்பகுதிக்கு வந்த அதிகாரிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதாவது சுற்று வட்டார பகுதிகளிலிருந்து அரசு அனுமதியின்றி மண்ணை திருடி வந்தபோது மின்கம்பத்தில் வாகனம் மோதி இருக்கலாம் எனவும், தப்பி செல்வதற்காக வண்டியில் இருந்த மண்ணினை அப்பகுதியிலேயே கொட்டி விட்டு சென்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மின் கம்பத்தை சேதப்படுத்திவிட்டு, மணலை அப்பகுதியிலேயே கொட்டி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.