திருவாடானை, ஜன.10: திருவாடானை அருகே சிகே மங்கலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே சிகே மங்கலத்தில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையம் வளாகத்திற்கு உள்ளேயே மின்வாரிய பணியாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கட்டிடத்தின் பாதி பகுதிகள் இடிந்து போய் விட்டது. மீதமுள்ள பகுதியும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், இங்கு பணியாளர்களுக்கு என கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து போய் விட்டது. இதனால் தற்போது ஊழியர்கள் யாரும் இல்லை.
அலுவலகத்திற்கு பொதுமக்கள் எதாவது புகார் தெரிவிக்க அல்லது தங்களது குறைகளை தெரிவிக்க செல்ல வேண்டி உள்ளது. அப்படி போகும் சமயத்தில் இந்த இடிந்து போன கட்டிடங்கள் வழியே செல்லும்போது அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் எப்போதாவது வளர்க்கப்படும் கால்நடைகள் அங்கு சென்று விடுகிறது. அவற்றை பிடிக்க செல்லும்போது கட்டிடம் விழுந்து உயிர் பலி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே மின்வாரிய குடியிருப்பை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.