Saturday, June 1, 2024
Home » ஆன்லைன் கும்பல் கைவரிசை புதுவையில் 12 பேரிடம் ₹6.50 லட்சம் மோசடி

ஆன்லைன் கும்பல் கைவரிசை புதுவையில் 12 பேரிடம் ₹6.50 லட்சம் மோசடி

by Karthik Yash

புதுச்சேரி, ஜன. 7: புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசையால் 12 பேர் ரூ.6.50 லட்சத்தை இழந்துள்ளனர். புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த இளங்கோவன், தனது வங்கி கணக்கிற்கான வெகுமதி புள்ளிகளை பெறுவது தொடர்பான ஒரு எஸ்எம்ஸ் வந்துள்ளது. அதில் உள்ள லிங்க்கில் சென்று வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. பாப்பஞ்சாவடியை சேர்ந்த கணேஷ் என்பவரிடம் மொத்தமாக நிலக்கடலை சப்ளை செய்வதாக தெரியாத நபர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி அவரும் ரூ.28,900 அனுப்பி ஏமாந்துள்ளார்.

சாரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், தெரியாத நபரிடம் ஓடிபி எண்ணை பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.15,600 எடுக்கப்பட்டுள்ளது. பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த முகமது நுபல், எல்லப்பிள்ளைச்சாவடியை சேர்ந்த கண்ணையன், மகாத்மா காந்தி சாலையை சேர்ந்த அன்பு தமிழ் ஆகியோரை தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு ஆன்லைனில் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளனர். இதை நம்பி முகமது நுபல் ரூ.2 லட்சமும், அன்புதமிழ் ரூ.2.58 லட்சமும், கண்ணையன் ரூ.20 ஆயிரத்தையும் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். ஜிப்மர் வளாகத்தில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவரிடம் பேஸ்புக்கில் அவரது நண்பர் போல் தெரியாத நபர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து அவசர சேவைக்கு பணம் கேட்டுள்ளார்.

இதை நம்பி அவரும் ரூ.15 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்துள்ளார். புதுச்சேரி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜோசப் விக்டர் ராஜ் என்பவரின் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு உருவாக்கி அவரது நண்பர்களிடம் மர்ம நபர் பணம் பறிக்க முயன்றுள்ளார். ஆதார் வழியாக எளிதாக பணம் எடுக்கும் வசதியை பயன்படுத்தி எஸ்.வி.பட்டேல் சாலையை சேர்ந்த சரவணனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4,500, சாரத்தை சேர்ந்த திருமுருகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம், சண்முகாபுரத்தை சேர்ந்த துரைராஜின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம், காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த பிரதீப் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரமும், டி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த சிவக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.18,500 மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. கருவடிக்குப்பத்தை சேர்ந்த முகமது நாசர் என்பவர் பேஸ்புக் வழியாக ரூ.50 ஆயிரத்துக்கு ஷூ வாங்க ஆர்டர் கொடுத்துள்ளார். பணம் செலுத்தி பல நாட்கள் கடந்த பிறகும் ஷூ வராமல் ஏமாற்றப்பட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

14 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi