சேலம்: தமிழகத்தில் சேலத்தில் தான் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிகளவில் உள்ளனர். சேலத்தில் அம்மாப்பேட்டை, சிங்கமெத்தை உள்பட பல பகுதிகளில் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2 கோடி அளவுக்கு பட்டு ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பட்டு வேட்டிகள், அங்கவஸ்திரங்கள் 50 சதவீதம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், மீதமுள்ள 50 சதவீத ஜவுளிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த வகையில் தமிழகத்தின் பட்டுநூல் தேவையை கர்நாடகாதான் பூர்த்தி செய்கிறது. அங்கிருந்து தான் 75 சதவீத பட்டு நூல்கள் வருகிறது. தற்போது கொரோனா 2வது அலையால் கர்நாடகாவில் கடந்த ஒன்றரை மாதமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், அங்கு பட்டுநூல் உற்பத்தி அறவே இல்லை. இதனால் இங்கும் வரவில்லை.இது குறித்து சேலம் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், தமிழகத்திலேயே சேலத்தில் தான் 90 சதவீதம் பட்டு வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு வேட்டிகள் நம் நாட்டில் மட்டுமின்றி சிங்காப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. 50,000க்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கால் கர்நாடகாவில் இருந்து பட்டுநூல் வரத்து இல்லாததால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பகிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 விலை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் கர்நாடகா, ஆந்திராவுக்கு பொது போக்குவரத்து இல்லாததால் தமிழகத்தில் ரூ.100 கோடி அளவுக்கு பட்டு வேட்டிகள், அங்கவஸ்திரங்கள் தேக்கமடைந்துள்ளது. கடன் வாங்கி தொழில் செய்யும் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் என்றனர்….