தஞ்சாவூர், ஏப்.27:ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு 2600 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயிலில் வந்தது. தமிழகத்தில் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு புழுங்கல்அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 42 வேகன்களில் 2600 டன் புழுங்கல் அரிசி தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூரில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. இந்த அரிசி மூட்டைகள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்படும்.