புதுக்கோட்டை, செப்.23: புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பெட்ரோல் நிலையம் அமைக்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு தாட்கோ முலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண், பெண் அனைவரும் வரும் 27ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல், டீசல் (ஒருடேங்கர்) தொகையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலமாக கடனாக வழங்கப்படும்.
பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளர்(திட்டங்கள்) கைபேசி எண்ணில் 7358489990 தொடர்பு கொள்ளலாம். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை 04322-221487 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.