பாடாலூர், ஏப்.26:பாடாலூர் அருகே ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முத்துசாமி பேசும்போது, சாக்கடை, குப்பை கூளங்கள், தேங்கி கிடக்கும் நீர் ஆகியவற்றின் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகிறது.
வீடுகளில் தேவையற்ற பொருட்களான டயர்கள், தேங்காய் ஓடுகள், காலி டப்பாக்கள் போன்றவைகளை அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே கொசுக்கள் உற்பத்தி ஆகாது என்றார். மேலும் மலேரியா நோயின் அறிகுறிகள், பரிசோதனை, தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராம்குமார், செவிலியர்கள், கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.