கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு புரட்டாசி பட்டத்தில் விவசாயிகள் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, குதிரைவாலி, சூரியகாந்தி போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட்டனர். புரட்டாசி துவக்கத்தில் சில கிராமங்களில் ஓரளவு பெய்த மழைக்கு பயிர்கள் முளைத்தன. அதன் பின்னர் சுமார் 20 தினங்கள் மழை பெய்யவில்லை. இதனால் பயிர்கள் கருகி விட்டன. அதன்பிறகு மீண்டும் விதைப்பு செய்யப்பட்டது.கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை பயிர்களை வளரவிடாமல் களை அதிகமாக முளைத்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் நிலங்களில் அதிக ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் நிலங்களில் இறங்கி பணி செய்ய முடியாததால் களை எடுக்க முடியாமல் பயிர்களை விட களை உயரமாக வளர்ந்து காணப்படுகிறது. பயிர்களை காப்பாற்ற களை மருந்து கை தெளிப்பான் மற்றும் விசை தெளிப்பான் மூலம் தெளித்து வருகின்றனர். இதற்கு கூலி ஆட்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். அதேவேளையில் ஆட்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது.இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2 ஆண்டுகளாக மேலை நாட்டு தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஆளில்லா சிறிய வடிவிலான பறக்கும் விமானம் (டிரோன்) மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மருந்து தெளித்து வருகின்றனர். இதனால் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் செலவு மிகவும் குறைவாக ஏற்படுகிறது.வரும் காலத்தில் மருந்து தெளிப்பதற்கு அதிக அளவில் மருந்து தெளிக்கும் டிரோன் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகும். எனவே மருந்து தெளிக்கும் டிரோன் இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….