Saturday, June 1, 2024
Home » ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்ற மூதாட்டி கழுத்துறுத்து கொலை

ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்ற மூதாட்டி கழுத்துறுத்து கொலை

by Karthik Yash

* காதுகளையும் அறுத்து நகை கொள்ளை
* எஸ்பி நேரில் விசாரணை பேரணாம்பட்டு அருகே கொடூரம்

பேரணாம்பட்டு, ஜூலை 7: பேரணாம்பட்டு அருகே மூதாட்டி கழுத்துறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். காதுகளையும் அறுத்து கம்மலை கொள்ளையடித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து எஸ்பி நேரில் விசாரணை நடத்தினார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி(60). இவரது கணவர் மோகன், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தம்பதிக்கு 2 ஆண், ஒரு மகள் உள்ளனர். வளர்மதி தினமும் 2 ஆடுகளை மேய்ச்சலுக்காக வீட்டின் அருகே உள்ள தனியார் நிலத்திற்கு அழைத்து சென்று விட்டு, மாலை 4 மணிக்கு திரும்பி வருவார். வழக்கம்போல், நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற வளர்மதி மாலை 4 மணிக்கு மேலாகியும் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொல்லை பக்கமாக சென்றபோது மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், வளர்மதி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். மர்ம ஆசாமிகள் வளர்மதியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் வளர்மதியின் காதுகளை அறுத்து காதில் இருந்த கால் சவரன் கம்மல்களை கொள்ளையடித்துள்ளனர். துண்டிக்கப்பட்ட காதுகளும் அருகே கிடந்தது. இந்த கொடூர சம்பவம் குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், எஸ்ஐ சரத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப போலீசார் முயன்றனர். அப்போது, பொதுமக்கள் சடலத்தை எடுக்க விடாமல், மோப்ப நாய் வர வேண்டும், கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனக்கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி இருதயராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் துப்புதுலக்க விடப்பட்டது. அப்போது மோப்பநாய் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடி போய் நின்றது. இச்சம்பவம் தொடர்பாக வேலூர் எஸ்பி (பொறுப்பு) கிரண்ஸ்ருதி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். கொலை தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘கொலை செய்யப்பட்ட வளர்மதி கால் சவரன் கம்மலை அணிந்திருந்தார். அதுவும் அடமானத்தில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு தான் அதனை மீண்டு அணிந்திருந்தார். அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம். மேலும் சடலம் கிடந்த இடத்தில் கஞ்சா வியாபாரம் மற்றும் கஞ்சா புகை குடிப்பதும் அதிக அளவில் நடக்கிறது. கஞ்சா போதையில் கொலை நடந்து இருக்கலாம்’ என்றனர்.

You may also like

Leave a Comment

16 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi