திருவண்ணாமலை, ஆக.1: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரமோற்சவம் நிறைவையொட்டி சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. மேலும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர பிரமோற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்தாண்டு ஆடிப்பூர பிரமோற்சவம் கடந்த 22ம் தேதி உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும், அன்று மாலை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், அம்மன் சன்னதி எதிரே தீமிதி விழாவும் நடந்தது. நேர்த்திக்கடன் செலுத்திய ஏராளமான பக்தர்கள் தீமித்தனர். தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தியம்மன் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆடிப்பூர விழாவின் நிறைவாக கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள 5ம் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தத்தில் பராசக்தியம்மனுக்கு தீர்த்தவாரி நேற்று பகல் 12.30 மணி அளவில் நடந்தது. அப்போது, அலங்கார ரூபத்தில் பராசக்தியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.