ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்கள் குவாட்ரபுள் ஸ்கல்ஸ் படகு போட்டியில் சத்னம் சிங், பர்மிந்தர் சிங், ஜாகர் கான், சுக்மீத் சிங் ஆகியோரடங்கிய இந்திய அணி நேற்று களமிறங்கியது. சீனா, உஸ்பெகிஸ்தான், இந்தோனேசியா அணிகளின் சவாலுக்கிடையே கடுமையாகப் போராடிய இந்திய அணி 6 நிமிடம், 8.61 விநாடிகளி பந்தய தூரத்தைக் கடந்து 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது. இந்த போட்டியில் சீனா (6:02.65) தங்கப் பதக்கமும், உஸ்பெகிஸ்தான் (6:04.64) வெள்ளிப் பதக்கமும் வென்றன. படகு போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 5 பதக்கங்களை அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெண்கலம் வென்று அசத்தல்
ஆண்கள் 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் குழு பிரிவில் ஆதர்ஷ் சிங், அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1718 புள்ளிகளுடன் டை பிரேக்கரில் இந்தோனேசியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது. இந்த பிரிவில் சீனா தங்கம் (1765), தென் கொரியா வெள்ளி (1734) வென்றன. துப்பாக்கிசுடுதலில் இந்தியா இதுவரை 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஹாங்சோ தொடரின் மகளிர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை ஓக்சனா சுசோவிடினா களமிறங்க உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் அறிமுகமாக 32 ஆண்டுகளுக்கு பிறகு தனது 48வது வயதில் அவர் ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் பங்கேற்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வால்டிங் & பேலன்ஸ் பீம் பிரிவில் களமிறங்க உள்ள ஓக்சனா நேற்று உற்சாகமாக பயிற்சி செய்தார்.
பதக்கத்துக்கான விலை!
சிய விளையாட்டு தொடரின் படகு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரு வீரர், துடுப்புகளை உறுதியாகப் பிடித்ததால் தனது கையில் ஏற்பட்ட காயத்தை புகைப்படம் எடுத்து ‘பதக்கத்துக்கான விலை’ என்று தகவல் பகிர்ந்துள்ளார். அவரது விடாமுயற்சியையும் மன உறுதியையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.