சென்னை : தமிழகத்தை கேட்காமல் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்பியது குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் பல மாநிலங்கள் திணறி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசிடம் தகவல் தெரிவிக்காமல், மத்திய அரசு தமிழகத்திலிருந்து 45 ஆயிரம் கிலோ ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகின. அது மட்டுமல்லாமல் கொரோனா நோயாளிகளின் உயிரை காக்கும் ரெம்டிசிவிர் மருந்துக்கு தமிழகம் முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரெம்டெசிவிர் பதுக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியது. ரூ.2,500 முதல் ரூ.3,000 விலை உள்ள ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் ரூ.7,000 வரை விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் செய்திகளின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் ஆக்சிஜன் வேறு மாநிலங்களுக்கு அனுப்பியது குறித்தும் ரெம்டெசிவிர் பதுக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பது குறித்தும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும் இது குறித்து தமிழக அரசின் விளக்கத்தை கேட்டு தெரிவிக்க தமிழக தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்சிஜன் விவகாரத்தில் பிற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை தமிழகத்துக்கு வந்து விடக் கூடாது என அறிவுரை வழங்கினர். தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை, இருப்பு உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவும் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்தது. …