புதுடெல்லி: கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் மருத்துவர் ஒருவரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. தன்னை சர்வோதயா மருத்துவமனையின் டாக்டர் அலோக் என கூறிக்கொள்ளும் அவர், ‘ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக ஓடி உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் உடனடியாக நெபுலைசர் கருவியை ஆன் செய்துவிட்டு மூக்கில் அணிந்து கொண்டால் அதில் இருந்து நீங்கள் ஆக்சிஜனை பெறலாம்,’ என வீடியோவில் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோவில் உண்மை இல்லை என்று சர்வோதயா மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த வீடியோவில் கூறப்படுவது எந்த ஆதாரத்தின் அடிப்படையிலேயோ, அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையிலேயோ கிடையாது. எங்கள் மருத்துவமனை இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் இது போன்ற எந்த நடைமுறையையும் பின்பற்ற வேண்டாம். இது நோய் மேலும் மோசமாக வழிவகுக்கும்,’ என கூறப்பட்டுள்ளது. ‘நெபுலைசர் என்பது சுவாச நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, திரவ மருந்தை நீராவியாக மாற்றக்கூடிய சாதனமாகும். ஆகவே, இதை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்துவது ஆபத்தானது,’ என்று மருத்துவ நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். …
ஆக்சிஜனுக்கு மாற்றாக நெபுலைசர் கருவியை பயன்படுத்த முடியுமா?….மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
previous post