திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பாக்கம் ஊராட்சியில் சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பாக்கம் காலனியில் வசித்து வந்தவர்களின் 40 க்கும் மேற்பட்டோர் வீடுகள் அகற்றப்பட்டது. அவ்வாறு வீடுகள் அகற்றப்பட்டவர்களுக்கு அதே பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ள நிலையில் மாற்று இடமாக பாக்கம் ஊராட்சியில் மாற்று இடம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரிய காலனிக்கு அருகில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் மாற்று சமூகத்தினர் வாழும் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை 6 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் 18 பேருக்கும் மேலாக வீட்டுமனைப் பட்டா வழங்க உள்ளதாக தெரிகிறது. பெரிய காலனியைச் சேர்ந்தவர்கள் ஆடு, மாடுகளை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு அனுப்புவதால் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில் இதே பகுதியில் அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா கொடுத்தால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதால் மாற்றுப் பகுதியில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.இதனால் 6 நபர்களுக்கு பட்டா வழங்கியதை திரும்ப பெற வலியுறுத்தியும், அவர்களுக்கு மாற்று இடத்தில் வழங்க வேண்டும் எனவும், புதிதாக வேறு யாருக்கும் வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டாம் என்பதை வலியுறுத்தியும் ராமநாதபுரம் கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் பாக்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி் நேரத்திற்கும் மேலாக நீட்டித்த சாலைமறியலால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் விவசாய நிலத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்க கூடாது என்றும், மாற்று இடத்தில் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதனை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சிய சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் முனிரத்தினம் உள்பட பலர் உடனிருந்தனர்….