மதுரை, ஜூன் 9: மதுரையில் சாலையோரங்களை ஆக்கிரமித்து கடைகள் வைத்து போக்குவரத்துக்க இடையூறு செய்தததாக, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை மதிச்சியம் பகுதியில், சாலையோரங்களை ஆக்ரமித்து, சிறு கடைகளை வைத்துக்கொண்டு, சிலர் போக்குவரத்திற்கு இடையூறு செய்துவருவதாக, போலீசாருக்கு புகார்கள் வருகின்றன. இதனையடுத்து, போலீசார் ஆக்கிரமிப்புகள் குறித்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், மதிச்சியம் எஸ்.ஐ. வைரகுமார் மற்றும் போலீசார், ஆழ்வார்புரம் பகுதியில் ேராந்து பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது, புளியந்தோப்பு சந்திப்பு, வைகை வடகரை மற்றும் ஆர்.ஆர். மண்டபம் உள்ளிட்ட இடங்களில், சாலையோரங்களை ஆக்கிரமித்து, ஆட்டோக்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழிற்கூடங்கள், மரக்கடை மற்றும் ஒர்க்ஷாப் அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும், பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக, விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(39), அவனியாபுரம் உதயகுமார்(23), மதிச்சியம் அறிவழகன்(45) மற்றும் தினேஷ் பெருமாள்(26) ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.