பள்ளிபாளையம், மே 5: கண்டிபுதூர் அரசு துவக்க பள்ளியில், அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிபாளையம் நகராட்சி கண்டிபுதூர் துவக்க பள்ளியில், தமிழக அரசின் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. கோடை விடுமுறையில், பள்ளி குழந்தைகளுக்கு பயனுள்ள தகவல்களை கற்பிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் துவக்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர் புவனேஷ்வரி, இல்லம் தேடி கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், வானவில் மன்ற கருத்தாளர் குணசேகர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் அன்றாட நிகழ்ச்சியில் நடைபெறும் நிகழ்வுகளுக்கான அறிவியல் விளக்கங்கள், செய்முறையுடன் விளக்கப்பட்டது. பின்னர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் வினாடி-வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.