அரியலூர்,செப்.11: அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நான் முதல்வன் மற்றும் தமிழ்நாடு அரசின் UPSC முதல்நிலைத் தேர்விற்கான ஊக்கத் தொகை திட்டம் (UPSC Prelims Scholarship Exam) தேர்வினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய மற்றும் மாநில பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதவுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தியதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் 323 பேர் இத்தேர்விற்கு பதிவு செய்திருந்தனர். அதில் 233 பேர் கலந்துகொண்டு இத்தேர்வினை எழுதினர். மேலும் 140 பேர் தேர்வு எழுத வரவில்லை.
மேலும் இத்தேர்வினை கண்காணிக்க மாவட்ட அளவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் முதன்மை கண்காணிப்பாளர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இத்தேர்வானது காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வு மையத்தினை பார்வையிட்டு குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரியலூர் ஆர்டிஓ ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.