திருமயம்,மே6: அரிமளம் அருகே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் முத்து விநாயகர், பாலமுருகன், முத்துமாரியம்மன், முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஊரார்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து கோயில் புனரமைப்பு பணிகள் கடந்த மாதம் முடிவடைந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சி மங்கள இசையுடன் தொடங்கி ரக்ஷா பந்தனம், லட்சுமி பூஜை, கோ பூஜை, திரவிய ஹோமம், உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
பல்வேறு புனிதத்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களில் அடைக்கப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை மங்கல இசையுடன் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். கருடபகவான் கோயில் கலசத்தை வட்டமிட பூஜிக்கப்பட்ட புனித நீர் கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கே.புதுப்பட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.