திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில் இருந்து கானப்பூர் வழியாக காரைக்குடி செல்லும் சாலை உள்ளது. இது ஒன்றிய சாலையாக இருந்து வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்ட நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு சாலை செப்பனிடப்பட்டது. அப்போது சாலையில் இருந்த பழைய பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த சாலையில் பாம்பாறு பாலம் அடுத்துள்ள ஆனைவாரி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் பாலம் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் மழையால் சேதம் அடைந்தது. இதனிடையே தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே சுமார் 10 அடி ஆழத்திற்கு சுரங்கம் போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பஸ் போக்குவரத்தும் உள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் வரும் வாகனங்களுக்கு சாலை நடுவே உள்ள பள்ளம் தெரியாததால் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது என கருதி வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளத்தில் பனை மட்டையை வைத்து எச்சரிக்கை செய்துள்ளனர். இருந்த போதிலும் இதனை பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கம் போல் சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்வது ஒரு புறம் இருக்க தற்சமயம் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடாமல் இருக்க எச்சரிக்கை பலகை உடனே நிறுவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் பாலம் கட்டி இரண்டு வருடங்களே ஆன நிலையில் பாலம் சேதம் அடைந்து காணப்படுவதால் அதனை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….