அரவக்குறிச்சி. மே 9: அரவக்குறிச்சி அரசு மேல் நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 87ம் ஆண்டில் பயின்ற மாணவர்களின் மூன்றாம் ஆண்டு தொடர் சந்திப்பும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் பொருட்டு ‘அரவை யூத் 87’ அறக்கட்டளை தொடக்க விழாவும், அரசுப்பள்ளியின் பயின்ற சிறந்த 10 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. தங்களுடைய ஆசிரியர்களை கௌரவித்து பழைய நினைவுகளை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பூங்கோதை, வெள்ளைக்கண்ணு ஆகியோர் பங்குபெற்று விழாவைச் சிறப்பித்தனர்.
விழாவிற்கு ‘அரவை யூத் 87’ தலைவர் மணியன் தலைமை வகித்தார். டாக்டர்கள் ஆர்த்தி, சக்திகுமார், சரஸ்வதி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், வட்டாரக்கல்வி அலுவலர் சித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரவக்குறிச்சி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சிறந்து விளங்கும் 10 மாணவர்களுக்குச் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாரிமுத்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். ராஜ்குமார் நன்றி கூறினார். அரசுப் பள்ளி மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இந்த முப்பெரும் விழாவில் 1987ம் ஆண்டு அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.