வேலூர், ஜூன் 21: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோக நிகழ்ச்சி நேற்று நடந்தது. உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் யோகா மருத்துவப் பிரிவு சார்பில் யோகா தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் பாப்பாத்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பிரிவு மருத்துவர் சஞ்சய்காந்தி வழிகாட்டுதலின்படி பல்வேறு யோகா ஆசணங்களை செய்து காட்டினார்கள்.
தொடர்ந்து முதல்வர் பாப்பாத்தி பேசுகையில், ‘யோகா என்பது உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகும். எனவே படிக்கும் மாணவர்களும் பொதுமக்களும் தங்கள் வாழ்வின் குறிக்கோளை வென்றெடுக்கவும், ஒரு ஆரோக்கியமான வாழ்வை அமைத்து கொள்ளவும் யோகா ஒரு அடிப்படையாகும். 8வயது முதல் 80 வயது வரை கூட அனைவரும் யோகாவை தினமும் ஒரு வாழ்வியல் முறையாக மேற்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும்’ என்றார். இந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரி வெலிண்ட்லா, குடியிருப்பு மருத்துவர் இன்பராஜ், பேராசிரியர்கள் ராஜவேலு, மோகன்காந்தி, பாஸ்கர், கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.