ஆரணி, பிப்.8: களம்பூர் அருகே அரிசி கடையில் அரசு மதுபானம் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். களம்பூர் அடுத்த தட்டாங்குளம் பகுதியில் உள்ள அரிசி கடையில் அரசு மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக களம்பூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் அரிசி கடைக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்கு களம்பூர் தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்த ரவி(எ)குள்ளாய் ரவி(61), கஸ்தம்பாடி கொல்லைமேடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(47) என்பவர்கள், அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து, கடையின் பின்புறம் சோதனை செய்ததில் 305 அரசு மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து குள்ளாய் ரவி, வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்து ஆரணி குற்றவியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.