கிருஷ்ணகிரி, ஏப்.12: வானவில் மன்ற போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவனை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டினார். கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜெயின்கான், வானவில் மன்ற போட்டியில், அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்திய பின், மீண்டும் பயன்படுத்த இயலாத பொருட்களைக் கொண்டு, குறைந்த விலையில் எளிய அறிவியல் மாதிரிகளை வடிவமைத்து மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வர், சட்டமன்ற பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி, வெளிநாடு சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில அளவில் சாதனை படைத்த மாணவர் ஜெயின்கானை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, பள்ளித்துணை ஆய்வாளர்கள் சுதாகர், ஜெயராமன் ஆகியோரும் மாணவரை பாராட்டினர். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் சுதாராணி, வழிகாட்டி ஆசிரியர் செல்வப்பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.