அண்ணாநகர்: வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மீரா (40), ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இதையறிந்த அதே மாவட்டத்தை சேர்ந்த சுகுமார், ‘‘சென்னை மதுரவாயல் சக்கரபாணி நகரை சேர்ந்த தனது நண்பர் சுந்தரகுமார் (47), அவரது மனைவி பிரியா (45) ஆகியோருக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளை தெரியும். அவர்கள் மூலம் அரசு பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கி தருகிறேன்,’’ என கூறியுள்ளார். பின்னர், அந்த தம்பதியை மீராவுக்கு அறிமுகம் செய்துள்ளார். இதைடுத்து, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ரூ.11 லட்சத்தை அந்த தம்பதியிடம் வேலைக்காக மீரா கொடுத்துள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால், மீரா பணத்தை திருப்பி கேட்டதால், தருவதாக கூறிவிட்டு தம்பதி மற்றும் சுகுமார் ஆகியோர் தலைமறைவாகினர். இதுகுறித்து, மீரா கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில், சுந்தரகுமார், பிரியா ஆகிய இருவரும் மதுரவாயலில் உள்ள அவர்களது வீட்டிற்கு வருவதாக, கோயம்பேடு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனே, விரைந்து சென்று இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சுகுமாரை தேடி வருகின்றனர்….