ஈரோடு, டிச. 1: ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள அரசு ஐடிஐ முன் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் சுமதி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சீனிவாசன் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார்.இதில், சிறந்த தொழிலாளர்களை உருவாக்கும் பாடங்களை குறைத்தும், பயிற்சி நேரம், மதிப்பெண்களை குறைத்து இருப்பதை மாற்றி அமைக்க வேண்டும்.
தேசிய கைவினைஞர் பயிற்சி திட்டத்தின்படி, வரையறுக்கப்பட்ட பாடங்களின் கால அளவை குறைத்து, செய்முறை பயிற்சி திறனை குறைத்து, டி.என்.எஸ்.டி.சி., கேம்பிரிட்ஜ், லாங்குவேஜ் ஆன் ஜாப் டிரைனிங் போன்ற பாடத்திட்டங்களை புகுத்த கூடாது. தற்காலிகமாக பணி செய்யும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பயிற்சி அலுவலர் பதவி உயர்வுக்கான தகுதி இருந்தும், அப்பதவிக்கான 60க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்தும், பணி ஓய்வு பெறுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் வஞ்சித்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அரசு தொழிற்பயிற்சி அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.