ஈரோடு, மார்ச் 5: ஈரோடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை கலெக்டர் தொடங்கி வைத்தார். அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையினை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் நலன் கருதி காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஈரோடு ஈபிபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அடுத்த கல்வியாண்டிற்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று தொடங்கி வைத்தார். மேலும் பள்ளியில் சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுக்கு மலர் கொத்து, சிலேட்டு மற்றும் இனிப்புகள் வழங்கி, வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தார். குழந்தைகளுக்கு சால்வை அணிவித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, மாவட்ட கல்வி அலுவலர் சுகுமார், ஆய்வாளர் மோகன்குமார், 2ம் மண்டல குழு தலைவர் காட்டு சுப்பு உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஈரோடு எஸ்கேசி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை சுமதி வரவேற்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் சுகுமார் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முதல் வகுப்பில் 12 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு சிலேட்டு, நோட்டுப் புத்தகம், பென்சில் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.