புதுக்கோட்டை, மே 25: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகிறார்.சிவகங்கை மாவட்டத்திலிருந்து கார் மூலம் புதுக்கோட்டை வரும் அமைச்சர் உதயநிதிக்கு, மாவட்ட எல்லையான சவேரியார்புரத்தில் பகல் 12 மணியளவில் திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து புதுக்கோட்டைக்கு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 6.30 மணியளவில் ஆலங்குடியில் நடைபெறும் திமுக பிரமுகர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து ஊனையூர் விளக்கு, பெல் பகுதி, கடியாப்பட்டிவிளக்கு, திருமயம் விளக்கு, அரசம்பட்டி, லேணாவிளக்கு, சுங்கச்சாவடி, நமணசமுத்திரம் கடைவீதி, சிவபுரம் ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் கீரனூரில் உள்ள திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே. செல்லப்பாண்டியன் வீட்டுக்குச் செல்லும் உதயநிதி, அங்கு செல்லப்பாண்டியனின் தந்தையின் மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். பின்னர் நல்லூர், மாத்தூர் வழியாக இரவு 9.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் வருகை தருவதால், பிரமாண்டமாக வரவேற்க திமுகவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந் நிகழ்ச்சிகளில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலர் செல்லப்பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.