அன்னூர்: கோவை மாவட்டம், அன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேனிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்று அன்னூரில் இருந்து தேனிக்கு சென்ற அரசு விரைவு பேருந்தில் செல்லும் பயணிகள் ‘பஸ் டே’ கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது சென்னை உட்பட பெருநகரங்களில் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், இளைஞர்கள் எல்லை மீறி பேருந்துகள் மீது அமர்ந்து பேருந்து பயணிகளையும், ஓட்டுநர் மற்றும் கண்டக்டர்களை தொந்தரவு செய்து வருகின்றனர்.
இதனையடுத்து காவல் துறையினர் எடுத்த நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்னூர் பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்ட பஸ் டே கொண்டாட்டத்தில், பேருந்திற்கு மாலை அணிவித்தும், பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகளை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் பேருந்து முன்பு கேக் வெட்டியும் கொண்டாடினர். பின்னர், கேக்கை சக பயணிகளுக்கும் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முன்னதாக பேருந்தின் ஓட்டுநர், கண்டக்டர்களுக்கு சால்வை அணிவித்து பயணிகள் கெளரவப்படுத்தினர்.