விருதுநகர், ஜூலை 26: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பாக இந்திய தொழிற்சங்க மைய சிஐடியு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகிக்க, நிர்வாகிகள் செல்லச்சாமி, ராமர், சாராள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.3 ஆயிரம் பென்சன், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்சன், ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி நிதி வழங்க வேண்டும்.
ஆன்லைன் பதிவை சீர்குலைக்க வேண்டாம். சர்வர் வேலை செய்யவில்லை என்ற குழப்பங்களை சரிசெய்ய வேண்டும். இயற்கை மரணம் ரூ.1 லட்சம், விபத்து மரணம் ரூ.5 லட்சமாக வழங்க வேண்டும். கட்டுமானத்தில் பென்சன் பெறும் தொழிலாளி இறந்தால் குடும்ப பென்சன் வழங்குவது போல் நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் மகாலட்சுமி, தேவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.