மதுரை: அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் அம்பேத்கர் படம் வைக்க சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி அரசு சட்டக்கல்லூரி மாணவர் சசிகுமார், தன்னை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் வேளையில், விடுதலைக்காக போராடிய தலைவர்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாக பார்க்கும் சூழல் உள்ளது. 4ம் ஆண்டு மாணவரான மனுதாரர், கல்லூரி முதல்வரின் அறையில் அம்பேத்கர் படத்தை வைக்கவும், தமிழ் வழியில் வகுப்புகள் நடத்தவும் கோரியுள்ளார். இது விதிவிலக்கற்றது. கல்லூரி முதல்வரிடம் முரட்டுத்தனமாகவும், அவதூறாகவும் நடந்துள்ளார். இதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மன்னிப்பு கேட்டு முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளார். இது போதுமானது. கல்லூரி முதல்வர் அறையில் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அம்பேத்கர்படம் வைப்பது குறித்த பிரச்னை எழுந்தபோது, நிதியமைச்சகம் மூலம் அனைத்து வங்கிகளிலும் வைக்க சுற்றறிக்கை கொடுக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். சமூக நீதியின் அடையாளமான அவரது பங்கு ஈடு செய்ய முடியாது. சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு அவர் மிகச்சிறந்த முன்னுதாரணம். தமிழகத்திலுள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் அம்பேத்கரின் புகைப்படத்தை வைப்பதற்கான சுற்றறிக்கையை சட்டக் கல்வி இயக்குநர் அனுப்ப வேண்டும். ஒரு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் அபராதத்தை வழக்கறிஞர் நல நிதியத்திற்கு செலுத்த ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். அந்த பணத்தை மனுதாரருக்கு வழங்க வேண்டும். அதில் அவர் சட்ட புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். இந்த நேரத்தில் எனது நீதிமன்ற அறையில் அம்பேத்கர் படம் இல்லை. இது விரைவில் சரி செய்யப்படும் என்று கூறி மனுவை முடித்து வைத்தார்….