செங்கல்பட்டு, ஆக. 28: செங்கல்பட்டில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஆட்டோ தொழிற்சங்க பெயர்பலகை, கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேலமையூர் என்.ஜி.ஓ நகர் பகுதியில் பாமகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நல தொழிற்சங்கம் சார்பில் நள்ளிரவில் அனுமதியின்றி தகவல் பலகை மற்றும் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதனைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் அங்கு வந்த தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருமணி என்.ஜி.ஜி.ஓ. நகர் மற்றும் இந்திரா நகர் பகுதி பாமகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அனுமதி பெறாமல் நள்ளிரவில் அதனை அமைத்தது தெரியவந்தது. அதனையடுத்து செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் புகழ் தலைமையில் வருவாய்த்துறையினர் நேரில் வந்து அங்கு நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தையும், தகவல் பலகையையும் அகற்றி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகம் முன்பு வட்டாட்சியர் தனலட்சுமியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடந்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பாதுகாப்பிற்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.