ஏழாயிரம்பண்ணை, ஏப்.13: ஏழாயிரம்பண்ணை அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர். ஏழாயிரம்பண்ணை அருகே அச்சங்குளம் பகுதியில் சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏழாயிரம்பண்ணை எஸ்ஐ செய்யது இப்ராஹிம் தலைமையில் போலீசார் அச்சங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அச்சங்குளத்தைச் சேர்ந்த பாண்டியன் தனது வீட்டின் அருகே அனுமதி இல்லாமல் 10 கிலோ எடை கொண்ட உதிரி ஜெயின்ட் வெடிகள், சரவெடிகள், 15 கிலோ எடை கொண்ட பிஜிலி வெடிகள், 30 குரோஸ் சரவெடிகள் மற்றும் மருந்து செலுத்தப்பட்ட சோர்சா சரவெடிகளை தயாரித்து பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெடி மற்றும் மருந்துப் பொருட்களை ஏழாயிரம்பண்ணை போலீசார் பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.