விழுப்புரம், ஏப். 13: விழுப்புரம் அருகே அரசு ஒதுக்கும் நிதியை முறைகேடு செய்ததாகக் கூறி அதிமுக ஊராட்சிமன்றத்தலைவரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர். விழுப்புரம் அருகே சகாதேவன்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த ராமையன்பாளையம் பகுதி பொதுமக்கள் நேற்று ஆட்சியர் மற்றும் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தைக்குப்பிறகு அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சகாதேவன்பேட்டையில் அதிமுகவைச் சேர்ந்தவர் ஊராட்சிமன்றத்தலைவராக உள்ளார். அவர் அரசு மூலம் வருகின்ற நிதியை முறைகேடாக பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் ரூ.1.50 லட்சம் மோசடி நடந்துள்ளது. அதேபோல், கோடையில் குடிநீர் மோட்டார்கள், குழாய்கள் சீரமைக்கப்படாமலும், புதுப்பிக்கப்படாமலும் வேலை செய்ததைப்போல் கணக்கு காண்பித்து பில் எடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம சபைக்கூட்டத்தில் ஊராட்சிமன்றத்தலைவரிடம் கேள்வி எழுப்பியபோது உரிய பதில் கூறாமல் செல்கிறார். கிராமங்களின் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் நேரில் வந்து சகாதேவன்பேட்டை கிராமத்தில் ஆய்வு செய்து, விசாரணை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.