கோவில்பட்டி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோரை கட்சியை விட்டு நீக்க தொண்டர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது என கோவில்பட்டியில் நேற்று முன்தினம் அதிமுக பேனர் கட்டி நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், கோவில்பட்டியில் நேற்று அளித்த பேட்டி: கோவில்பட்டியில் அதிமுக பேனர் கட்டி கூட்டம் நடத்தியவர்கள் அனைவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிமுக பேனரை பயன்படுத்தி கூட்டம் நடத்துவது வெட்கக்கேடான செயல். இதில் பங்கேற்ற அனைவரும் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனுக்காக தேர்தல் பணியாற்றியவர்கள். குக்கர் சின்னத்திற்காக வாக்கு கேட்டவர்கள். இவர்கள் இனி அதிமுக பெயரை பயன்படுத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்….