ஆவடி: ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட பருத்திப்பட்டு பகுதியில் அதிநவீன காவல் சோதனைச் சாவடி புதிய கட்டடம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் அறிவுறுத்தலின்படி, ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலை, பருத்திப்பட்டு மேல்பாக்கம் சந்திப்பில் காவல் சோதனை சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த அதிநவீன சோதனைச் சாவடி புதிய கட்டடம் நேற்று திறக்கப்பட்டு வாகனத் தணிக்கை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வாகன எண்களைக் கண்டறியும் தானியங்கி கேமராக்கள் 3, கண்காணிப்பு கேமராக்கள் 6, அதை காவலர்கள் கண்காணிக்க மானிட்டர், 300 கிலோ எடை கொண்ட நான்கு பேரிகார்டு, சோதனை சாவடியில் காவலர்களுக்கு ஆடைகள் மற்றும் கழிவறை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடத்தை ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐ.பி.எஸ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் பாஸ்கர், உதவி ஆணையர் அன்பழகன், சதாசிவம், ஜவகர் ஆவடி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கோபிநாத் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.