மதுரை, ஏப். 27: பாதுகாப்பற்ற முறையில் அதிக பாரத்தை ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு வகையான வாகனங்களில் சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுகிறது. இந்த வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பொருட்கள் எடுத்துச் செல்வதால் ஆங்காங்கே விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் ஒத்தக்கடையில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் சாலையில் மினிலாரியில் அதிகளவு கரும்புகள் ஏற்றிச் செல்லப்பட்டது.
திடீரென கரும்புகள் சரிந்து சாலையில் விழுந்தன. இவை பின்னால் வாகனங்களில் வந்தவர்களுக்கு பெரும் இடையூறாக மாறின. எனவே, வாகனங்களில் அதிகளவு சரக்கு ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.