ஊட்டி, பிப்.5: ஊட்டி பிரீக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சரவணசந்தர் தலைமை வகித்தார். குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கருத்தாளர் ஆக கலந்து கொண்டு பேசும்போது: அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பொருட்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தைகளாக இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகள் பார்க்கப்படுகின்றன.
ஓரு நாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை சிதைத்து நுகர்வு கலாசார வலைக்குள் மக்களை சிக்க வைத்து விட்டால் வணிக வலைக்குள் விழுந்து விடுவார்கள். இதனை விளம்பரங்கள் வாயிலாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. கடன், லஞ்சம், வரதட்சணை, திருட்டு போன்ற சமூகத்தீமைகள் அதிகமாகி உள்ளது. உணவு கலாசாரம் மாறி சீன உணவுகளுக்கு அடிமையாகி உள்ளனர். அபாயத்தின் அவதாரம் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிடும் அஜினாமோட்டோ கலந்த உணவு விரும்பி உண்ணப்படுகிறது.
இதனால் ஆஸ்துமா, குடல் பாதிப்பு நரம்புத்தளர்ச்சி போன்ற பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். புரோட்டா மாவில் கலக்கப்படுகின்ற பென்சாயில் பெராக்ஸைடு அலெக்சான் போன்ற ரசாயனங்களால் புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாக்லெட்டில் உள்ள லெசித்தின் பசியை மறக்க வைத்து விடுகிறது. பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகள் குடல் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
நுகர்வோரை பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ம் ஆண்டு இயற்றப்பட்டது. தற்போது மாறிவரும் வணிக முறைகளுக்கு ஏற்ப புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ம் ஆண்டு இயற்றப்பட்டது. இளம் வயதில் எளிய வாழ்க்கை வாழ பழகி கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமான பொருள்களை வாங்கி குவிக்கும் கலாசாரத்திற்குள் சிக்கிவிடாமல் விழிப்புணர்வு உடையவர்களாக வாழவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.