கடலூர், செப். 14: அண்ணா பிறந்த நாளையொட்டி நன்னடத்தை அடிப்படையில், கடலூர் மத்திய சிறையில் இருந்து 2 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். கடலூர் முதுநகர் அருகே கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 500க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் இருந்து 2 ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நாகை மாவட்டம் வெள்ளிபாளையத்தை சேர்ந்த சித்திரைவேல் மகன் சுரேஷ் (50) என்ற ஆயுள் தண்டனை கைதியும், விழுப்புரம் மாவட்டம் சண்முகபுரம் காலனியை சேர்ந்த சுப்பையா மகன் செந்தில் (47) என்ற ஆயுள் தண்டனை கைதியும் நேற்றுமுன்தினம் மாலை கடலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.