திருச்செங்கோடு, டிச.11: திருச்செங்கோட்டில் அடுத்தடுத்த 3 கடைகளின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், மசாலா பொருட்களை திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்செங்கோடு 8வது வார்டு மாங்குட்டைபாளையம் மேட்டுக்கடையில், கல்பனா(41) என்பவர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். இக்கடைக்கு அருகே மகாலட்சுமி என்பவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அருகில் அருள் என்பவர் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று காலை டிபார்ட்மெண்ட் ஸ்டோரை திறக்க வந்த கல்பனா, ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். இதேபோல மற்ற 2 இடங்களிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், சிசிடிவி ேகமராகள் சேதப்படுத்தி இருப்பதையும் கண்ட பொதுமக்கள்.
திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் எஸ்ஐ நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் பணம் ஏதும் திருடு போகவில்லை என்றும், ஸ்டோரில் இருந்த மசாலா பொருட்கள் மட்டும் திருடு போனதையும் கண்டுபிடித்தனர். தடயவியல் நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.