செய்யாறு, செப்.4: செய்யாறு அருகே புதுப்பாளையம் கிராமத்தில் உலக நன்மை வேண்டி அங்கையர்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் 10008 சங்காபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள அங்கையர்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் உலக நன்மை வேண்டி சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. சங்காபிஷேக விழாவினையொட்டி நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாவாசனம், ரக்ஷ்யாபந்தனம், பத்தாயிரத்து எட்டு சங்கு பூஜை, கலச ஸ்தாபனம், முதல் கால யாக பூஜை, இரவு திர்வியாஹீதி, தீபாரதனைகள் நடந்தது.
தொடர்ந்து, நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாவாசனம், கலச பூஜை, 10008 சங்கு பூஜை, 108 கோ பூஜை, அஸ்வ பூஜை, திரவியஹூதி, மகா பூர்ணாஹூதி நடந்தது. அதனை தொடர்ந்து மூலவர்களுக்கு மகா அபிஷேகம், கலச அபிஷேகம் மற்றும் பத்தாயிரத்து எட்டு சங்காபிஷேகம் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு தீபாரதனை நடந்தது. இதில் புதுப்பாளையம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.